அரசாங்க திறைசேரிக்குள்  ஊடுருவிய சைபர் மோசடியாளர்கள் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி

Meiveli Media Team

நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி முறைமைக்குள் ஊடுருவி , 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டிருப்பதை நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.  இது தொடர்பான முறைப்பாடுகள் சட்ட அமலாக்கப் பிரிவினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு வழங்க வேண்டிய 22.9 மில்லியன் டொலர் கடன் தவணையில், 2.5 மில்லியன் டொலர் நிதியைத் திறைசேரி செலுத்தியுள்ளது. எனினும், கணினி முறைமைக்குள் ஊடுருவிய சைபர் மோசடியாளர்கள், போலி மின்னஞ்சல்கள் ஊடாக அந்த நிதியை வேறொரு கணக்கிற்குத் திசைதிருப்பி திருடியுள்ளனர்.

இந்தச் சம்பவம் 2025 டிசம்பர் முதல் 2026 ஜனவரி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதற்கட்ட உள்ளக விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடமை தவறிய குற்றச்சாட்டில் இரண்டு பணிப்பாளர்கள், ஒரு கணினி இயக்குபவர் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு எதிராகத் தீவிர ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், இந்த நிதி காணாமல் போனது குறித்து ஊடகவியலாளர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.  இதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ‘ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன இது குறித்து சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  பாராளுமன்றக் குழுவொன்றின் ஊடாக இது குறித்து விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து சபாநாயகரே தீர்மானிப்பார். நிதி அமைச்சு விரைவில் இது தொடர்பான மேலதிக விபரங்களைத் தெளிவுபடுத்தும் எனத் தெரிவித்தார்.