மே தின பாதுகாப்பு மற்றும் உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் குறித்து அமைச்சர் ஆனந்த விஜேபால விசேட விளக்கம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

எதிர்வரும் மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், மே தினக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாரால் விரிவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் இலங்கை பொலிஸாரும், குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் இணைந்து அவசியமான சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கத்தோலிக்க திருச்சபையும் பொதுமக்களும் நீண்டகாலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த விசாரணைகள் அமையும் எனவும், மிக விரைவில் விசாரணைகளை நிறைவு செய்து உண்மைகளை வெளிப்படுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மக்கள் மற்றும் கத்தோலிக்க சபை எதிர்பார்க்கும் தரத்திற்கு அமையவே இந்த விசேட புலனாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் வலியுறுத்தினார்.