அமைச்சர் குமார் ஜயகொடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை: பதவி விலகக் கோரி பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்து

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு மலர் வீதியிலுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் காரியாலயத்தில் இன்று (09) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார் ஜயகொடிக்கு எதிராக நாளை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.

இந்த விவகாரத்தில் அரசாங்கம் முன்வைக்கும் வாதங்கள் முற்றிலும் அபத்தமானவை எனத் தெரிவித்த அவர், குறித்த ஊழல் சம்பவம் குமார் ஜயகொடி அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் நடந்தது என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என அரசாங்கம் கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். அமைச்சர் குமார் ஜயகொடி முன்னர் உரக்கூட்டுத்தாபனத்தில் நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில், முறையற்ற கொள்முதல் நடைமுறைகள் ஊடாகத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு முறையற்ற இலாபத்தை ஈட்டிக்கொடுத்ததோடு, அதன் மூலம் அரசாங்கத்திற்குப் பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார் எனக் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக வழக்குத் தொடரக்கூடிய அளவிற்குப் போதிய ஆதாரங்கள் இருப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒருவர் அமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவோ, ஒரு கூட்டுத்தாபனத்தின் தலைவராகவோ அல்லது உள்ளூராட்சி மன்ற உறுப்பினராகவோ இருந்திருக்கலாம், ஆனால் அரசாங்கத்தின் சொத்துக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும்போது, அக்குற்றம் அவர் அமைச்சரான பின்னரா அல்லது அதற்கு முன்னரா இடம்பெற்றது என்பது முக்கியமல்ல என பேராசிரியர் பீரிஸ் விளக்கமளித்தார். இத்தகைய பின்னணியைக் கொண்ட ஒருவர் மிக முக்கியமானதொரு அமைச்சின் தலைமைப் பதவியை வகிப்பது மக்களின் நலனுக்கு உகந்தது அல்ல எனவும் அவர் வலியுறுத்தினார்.
எனவே, ஜனநாயகப் பண்புகளை மதித்து அமைச்சர் குமார் ஜயகொடி தற்காலிகமாகவேனும் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது அரசாங்கம் அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதே தற்போதைய பிரதான கோரிக்கையாகும் என அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் இந்த விவகாரத்தில் தர்க்கரீதியற்ற வாதங்களை முன்வைப்பதன் மூலம், அவர்கள் எந்த அளவிற்கு தவிர்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது வெளிப்படுவதாக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.