சுயநினைவற்ற நிலையில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி : கோமில் மருத்துவ சிகிச்சை பெறுவதாக தகவல்
Meiveli Media Team

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி,
தற்போது சுயநினைவற்ற நிலையில் புனித நகரமான கோமில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொஜ்தபா கமெனி சுயநினைவின்றி இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தூதரகக் குறிப்பொன்றை மேற்கோள் காட்டி, ‘தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவரது இருப்பிடம் வெளிப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.
தலைநகர் தெஹ்ரானுக்குத் தெற்கே 87 மைல் தொலைவில் உள்ள கோம் நகரம், ஷியா இஸ்லாமியர்களின் புனிதத் தலமாகவும், மதத் தலைநகராகவும் கருதப்படுகிறது. உச்ச தலைவர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளுக்குத் தெரிந்திருந்த அவரது இருப்பிடம் தற்போதுதான் முதன்முறையாக பொதுவெளியில் கசிந்துள்ளது. மொஜ்தபா கமெனி பதவிக்கு வந்தது முதல் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. ஈரான் அரசு ஊடகங்கள் அவர் கூறியதாகச் சில செய்திகளை வெளியிட்டாலும், அவரது நேரடி வீடியோ காட்சிகளோ புகைப்படங்களோ வெளியாகவில்லை என்பது இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இதனிடையே, மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா கமெனியின் உடலை கோம் நகரில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

