மின்சார உற்பத்திக்கான மேலதிக செலவுகளை மக்களிடம் அறவிடப்போவதில்லை: அரசாங்கம் அதிரடித் தீர்மானம்

Meiveli Media Team

மின் உற்பத்திக்காக ஏற்படும் மேலதிக செலவுகள் எதனையும் பொதுமக்களின் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கப்போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், அதிக செலவுடைய வெப்ப மின் உற்பத்தி நிலையங்களை நம்பியிருக்க வேண்டியுள்ளது. உலக சந்தையில் டீசல், நெப்தா மற்றும் பர்னஸ் ஒயில் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு. இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் தரம் குறைவாக இருப்பதால், மின் அலகுகள் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில்  ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் கப்பல் பாதை தடைகள் காரணமாக மசகு எண்ணெய் கப்பல்கள் வருவதற்கு ஏப்ரல் நடுப்பகுதி வரை தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் சில நாட்களுக்கு மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மின் உற்பத்திக்குத் தேவையான நெப்தா மற்றும் பர்னஸ் ஒயிலுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனைத் தவிர்க்க, அதிக செலவில் பர்னஸ் ஒயிலை நேரடியாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிலக்கரி தரம் குறித்த பரிசோதனை அறிக்கைகளில் நிலக்கரி தகுதியானது என காட்டப்பட்டாலும், நடைமுறையில் மின் உற்பத்தி குறைவாகவே உள்ளது.ஆகவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய  கொடுப்பனவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.தரம் குறைந்த நிலக்கரியால் ஏற்படும் மேலதிக உற்பத்திச் செலவை ஈடுகட்ட அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்திக்காக ஏற்படும் இந்த மேலதிக செலவுகள் எதனையும் பொதுமக்களின் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கப்போவதில்லை .
நஷ்டங்கள் அனைத்தும் தரம் குறைந்த எரிபொருளை வழங்கிய நிறுவனங்களிடமிருந்தே அறவிடப்படும் என ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.