உள்ளூர் கைத்தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து IMF பிரதிநிதிகளுக்கும் கைத்தொழில் அமைச்சிற்கும் இடையில் கலந்துரையாடல்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி அவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (2026.04.06) கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது நாட்டின் கைத்தொழில் துறை கொண்டுள்ள ஆற்றல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக கைத்தொழில் துறை வழங்கி வரும் பங்களிப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து அமைச்சர் இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் பொருளாதார சீர்திருத்தச் செயற்பாடுகளில், கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இதன்போது வெகுவாகப் பாராட்டினர். அத்துடன், உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் நிலவும் தடைகளை அகற்றுதல், ஏற்றுமதிச் செயல்முறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பொருத்தமான சூழலை உருவாக்குவது குறித்தும் இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு இணையாக உள்ளூர் கைத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படக்கூடிய சலுகைகள் மற்றும் நிதி வசதிகள் தொடர்பாகவும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

இந்த விசேட சந்திப்பில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். சர்வதேச நாணய நிதியத்தை (IMF) பிரதிநிதித்துவப்படுத்தி அதன் கொழும்புக்கான வதிவிடப் பிரதிநிதி மார்த்தா வோல்டமைக் மைக்கேல் (Martha Woldemichael), பொருளாதார நிபுணர்களான கிளாகோ அகேபனிட்டாவோன் (Klakow Akepanidtaworn) மற்றும் உர்சுலா விரியாடினாடா (Ursula Wiriadinata) ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

