கொழும்பில் “இயேசு ஜீவிக்கிறார்” சர்வதேச சுவிசேஷ பணிமனையின் ஏற்பாட்டில் புனித வெள்ளி பாதயாத்திரை

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சர்வ வல்லமையுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் மீட்புக்காக சிலுவையில் தன் உயிரையே அர்ப்பணம் செய்த தினமான புனித வெள்ளியை முன்னிட்டு, அவருடைய சிலுவை பாடுகளை நினைவுகூரும் விசேட பாதயாத்திரை மற்றும் ஆராதனை நிகழ்வு நேற்று கொழும்பில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

“இயேசு ஜீவிக்கிறார்” சர்வதேச சுவிசேஷ பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வானது, நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் கொழும்பு 14, ஆமர் வீதியில் அமைந்துள்ள பெர்னாந்து பிளேசில் ஆரம்பமானது.
திரளான இறை மக்கள் பக்தி உணர்வுடன் ஒன்றிணைந்து ஆரம்பித்த இந்த பாதயாத்திரை, மருதானை ஊடாக பயணித்து கொழும்பு ஹயிட் பார்க் மைதானத்தை சென்றடைந்தது.

பாதயாத்திரையின் நிறைவில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி அன்பையும் அவர் மனிதகுலத்திற்கு வழங்கிய மன்னிப்பையும் தியானிக்கும் விசேட ஆராதனை நடாத்தப்பட்டது.

கலாநிதி M.R. இராஜேந்திரம் மற்றும் Dr. C.V. இராஜேந்திரம் ஆகியோர் இந்த வழிபாட்டு நிகழ்வுகளை முன்னின்று வழிநடத்தியதுடன், புனித வெள்ளியின் மகத்துவத்தை பறைசாற்றும் வகையில் வல்லமையான தேவ செய்தியையும் வழங்கியிருந்தனர். ஆயிரக்கணக்கான ஜனங்கள் இந்தப் பெருவிழாவில் ஒன்றுகூடி, ஒருமித்த மனதுடன் ஆராதித்து இறை ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.