அப்பிள் , மற்றும் மைக்ரோசொப்ட் , உள்ளிட்ட 18 அமெரிக்க நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் அதிரடி எச்சரிக்கை
Meiveli Media Team

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் , மற்றும் மைக்ரோசொப்ட் , உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய எல்லைக்குள் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது. ஈரானிய செய்தி நிறுவனமான ‘தஸ்னிம்’ வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த தாக்குதல் பட்டியலில் அப்பிள், மைக்ரோசொப்ட் , கூகுள், டெஸ்லா, இன்டெல் , ஐ.பி.எம் , போயிங் போன்ற முன்னணி நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன. ஈரானிய மண்ணில் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு பயங்கரவாதச் செயலுக்கும் கைமாறாக, அந்தந்த நிறுவனங்களின் கிளைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் முதலாம் திகதி முதல் இந்த இலக்குகள் மீதான நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் அமைந்துள்ள இந்த நிறுவனங்களின் தரவு மையங்கள் மற்றும் அலுவலகங்கள் ஈரானின் ஏவுகணை அல்லது சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் என சர்வதேச அரசியல் அவதானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே அமேசான் நிறுவனத்தின் சில தரவு மையங்கள் கடந்த வாரம் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

