அதிகரிக்கும் வெப்பநிலை: நோய் அபாயம் அதிகரிப்பு

Meiveli Media Team


தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் அன்றாடச் செயற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர்
அறிவுறுத்தியுள்ளனர். வெப்பமான காலநிலையால் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நீரிழப்பு,
வெப்பத்தாக்கம் மற்றும் தோல் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாடசாலைகளில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் தவிர்த்து, அதிகாலை அல்லது மாலை வேளைகளில் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பணியிடங்களில் வெளியில் வேலை செய்பவர்களின் நலன் கருதி, பணிகளை முற்பகல் 10.30 மணிக்கும் முன்னதாக அல்லது பிற்பகல் 3.30 மணிக்குப் பின்னரோ மாற்றியமைக்க வேண்டும்.  நண்பகல் வேளையில் நேரடி சூரிய ஒளியில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்இ ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து வைத்து காற்றோட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது குளிர்ச்சி தரும் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும் குறைந்தது 2.5 லீற்றர் நீர் அருந்த வேண்டும். சர்க்கரை கலந்த பானங்கள், கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் மதுபானங்களைத் தவிர்க்க வேண்டும். மேலும் உடலில் நீர்ச்சத்து உள்ளதா என்பதை சிறுநீரின் நிறத்தைக் கொண்டு அவ்வப்போது அவதானிக்க வேண்டும். வெளியில் செல்லும் போது குடை, தொப்பி அல்லது முழு உடலையும் மறைக்கும் வகையிலான ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும்.
வாகன சாரதிகள் வெயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்குள் ஏறுவதற்கு முன்னர், ஜன்னல்களைத் திறந்து உட்புற வெப்பத்தைக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">