கோரிக்கை விடுத்தால் எரிபொருள் வழங்க தயார்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், நாட்டிற்குத் தேவையான எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெயை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.
தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்:
“இலங்கை, ஈரானின் நெருங்கிய நண்பன். இலங்கை நெருக்கடிகளுக்கு உள்ளாவதை ஈரான் ஒருபோதும் விரும்பாது. இலங்கைக்கு உதவி தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த உதவிகளை வழங்க நாம் தயாராகவே உள்ளோம்.”
ஈரானில் வாழும் இலங்கையர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டவர்களையும் பாதுகாப்பதற்கான விரிவான கட்டமைப்பு ஈரானில் உள்ளது. எவரேனும் வெளிநாட்டவர் தமது சொந்த நாட்டிற்குத் திரும்ப விரும்பினால், அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கவும் ஈரான் தயாராக உள்ளது.
இலங்கை கடற்படைத் தளபதி, ஈரான் கடற்படைத் தளபதிக்கு விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே (Iris Dena) மற்றும் ஏனைய இரண்டு கப்பல்களும் இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்தன என்றும் தூதுவர் அலி ரேசா டெல்கோஷ் இதன்போது விளக்கமளித்தார்.

