இலங்கையிலுள்ள விவசாயக் கழிவுகள் இருந்து எரிவாயு: நோர்வே ஆர்வம்
Meiveli Media Team

இலங்கையிலுள்ள விவசாயக் கழிவுகள் அதிகம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, அங்கிருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் செயன்முறையை முன்னெடுப்பதற்கு நோர்வே அவதானம் செலுத்தியுள்ளது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் நோர்வே தூதரக அதிகாரி ஸ்டர்ல் ஹரால்ட் பீடர்சன் ஆகியோருக்கு இடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, விவசாயத் துறைக்காக மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்துப் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பல்வேறு வழிகளில் எரிசக்தியை உற்பத்தி செய்வது தொடர்பாக நோர்வே தூதரக அதிகாரி இதன்போது கருத்துக்களை முன்வைத்தார். காற்றுச் சக்தி, சூரியச் சக்தி மற்றும் கடலின் அலைச் சக்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கு இலங்கைக்கு உதவ முடியும் என அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர்கள் தயாரித்த திட்ட அறிக்கை ஒன்றும் இதன்போது அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் பகல் நேரங்களில் சூரிய சக்தி அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதை அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்ட தூதரக அதிகாரி, அந்த மேலதிக சூரிய சக்தியைப் பயன்படுத்தி நீரைப் மின்னாற்பகுப்பு செய்வதன் மூலம் ஹைட்ரஜனை உற்பத்தி செய்து, அதனை எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் எனச் சுட்டிக்காட்டினார். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனை விவசாயத் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என ஸ்டர்ல் ஹரால்ட் பீடர்சன் மேலும் தெரிவித்தார்.

