இந்த ஆண்டு ‘சிசு சரிய’ சேவையில் 200-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் இணைப்பு: மாணவர் போக்குவரத்துக்காக ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீடு

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

​கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து முன்னெடுத்து வரும் ‘சிசு சரிய’ பாடசாலை பேருந்து சேவையை மேலும் முறைப்படுத்துவதற்காக, இந்த 2026 ஆம் ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

இன்று (12) இசுருபாய வளாகத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
​பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில் அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர், அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது மாணவர்களைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வது தொடர்பான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், அதற்காக இந்த ஆண்டு சுமார் ஒரு பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து ‘சிசு சரிய’ பாடசாலை பேருந்து சேவையை மிகவும் முறையாக முன்னெடுத்துச் செல்வதன் மூலம், பாடசாலை மாணவர்கள் உடல் மற்றும் மன ரீதியான அழுத்தங்கள் இன்றி கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான பாதுகாப்பான போக்குவரத்து பொறிமுறையை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

​இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால மற்றும் அதன் திட்டமிடல் பணிப்பாளர் ஆலோகா கருணாரத்ன ஆகியோர், மாணவர்களின் கல்விக்கு பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் பல புதிய நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக, தனியார் பாடசாலை போக்குவரத்து சேவைகளை முறையாகத் தரப்படுத்துவதற்கு இருந்த சட்ட ரீதியான தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் வாகனங்களின் தரம், ஓட்டுநர்களின் அனுபவம் மற்றும் உதவியாளர்களின் விபரங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான சட்டமூலங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

​தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலும் கருத்து தெரிவிக்கையில், ‘சிசு சரிய’ பேருந்து சேவையை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்காக தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சிறிய ரக பாதுகாப்பு வாகன உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுத்தனர்.

ஆர்வமுள்ளவர்கள் தமக்கு அருகிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை (SLTB) அலுவலகங்களில் தமது விருப்பத்தைத் தெரிவிக்க முடியும் எனவும், போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் மாணவர்கள் இருப்பார்களாயின், அது குறித்து அதிபர்கள் ஊடாக உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதன் மூலம் இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.