இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி 2026 மாணவர்களின் பேரெழுச்சியுடன் கொழும்பில் நடைபெற்றது

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள “Battle of Hindus” கிரிக்கெட் பெருஞ்சமர் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நடைபவணி (Big Match Walk 2026), இன்றைய தினம் (07/03/2026) மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஆயிரக்கணக்கானோர் அணிதிரண்ட இந்த நடைபவணி, கல்லூரியின் ஒற்றுமையையும் பெருமையையும் பறைசாற்றுவதாக அமைந்தது.


கல்லூரி பிரதான நுழைவாயிலில் ஆரம்பமான இந்த நடைபவணியில், பாடசாலையின் பல்வேறு பிரிவுகளின் கண்கவர் அணிவகுப்புகள் இடம்பெற்றன. குறிப்பாக விளையாட்டுத் துறையினர், சாரணர்கள், முதலுதவிப் பிரிவினர், போக்குவரத்துப் பிரிவினர் மற்றும் கல்விசார் கழகங்களின் சீரான மற்றும் அழகிய அணிவகுப்புகள் வீதியெங்கும் கூடியிருந்த பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.

லோரன்ஸ் வீதி, காலி வீதி, ருத்ரா மாவத்தை, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை ஊடாகப் பயணித்து, பாமன்கடை சந்தி வழியாகச் சென்ற இந்த நடைபவணி இறுதியில் கல்லூரி விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.


நடைபவணியின் நிறைவில் மாணவர்களையும் பழைய மாணவர்கள் உட்பட வருகை தந்த அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “DJ” இசை நிகழ்ச்சி, அனைவரையும் ஆட்டத்திலும் பாட்டத்திலும் திளைக்க வைத்து நிகழ்வுக்கு மேலும் மெருகூட்டியது.

இந்துக் கல்லூரி கொழும்பின் கல்லூரி சமூகம் மற்றும் பழைய மாணவர் சங்கம் (HCCOBA) ஆகியவற்றின் சிறப்பான ஒருங்கிணைப்பில், 15-வது இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டிக்கான முன்னோட்டமாக அமைந்த இந்த நடைபவணி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகப் பதிவானமை குறிப்பிடத்தக்கது.