கொழும்பில் எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பியது: மக்கள் நிம்மதி!

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடுமையான சமையல் எரிவாயு தட்டுப்பாடு தற்போது நீங்கி, விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

இன்று காலை முதல் நகரின் பல இடங்களுக்கு எரிவாயு ஏற்றிய லொரிகள் வருகை தந்துள்ளதோடு, மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இன்றி இலகுவாக எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதை காணக்கூடியதாக உள்ளது.

நேற்று வரை எரிவாயு கிடைக்காமல் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருந்ததாகத் தெரிவிக்கும் பொதுமக்கள், இன்று தடையின்றி தாராளமாக எரிவாயு விநியோகிக்கப்படுவது தங்களுக்குப் பெரும் ஆறுதலை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தட்டுப்பாட்டை நீக்கி விநியோகத்தைச் சீர்செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதால், உணவகங்கள் மற்றும் சாதாரண குடும்பங்கள் தங்களது அன்றாட சமையல் பணிகளை எவ்வித தடையுமின்றி மீண்டும் ஆரம்பித்துள்ளன.

தற்போதைய நிலையில் சந்தையில் போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும், விநியோகக் கட்டமைப்பு சீராக இயங்குவதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.