‘தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்கள், ஏலங்களை அள்ளி வீசும் திமுக அரசு: தினகரன் விமர்சனம்

Meiveli Media Team

 

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக அரசு. தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழகத்தில் சாலை, குடிநீர் குழாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சார்ந்த பணிகளுக்காக கடந்த 15 தினங்களில் மட்டும் சுமார் 5 ஆயிரம் டெண்டர்களும், ஒரே நேரத்தில் 50-க்கும் அதிகமான கல்குவாரிகளுக்கு ஏலமும் அவசரகதியில் அறிவிக்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் அரசுத் துறை சார்ந்த பணிகளை மேற்கொள்வதிலும், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதிலும் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வந்த திமுக அரசு, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கால அவகாசம் நெருங்கி வரும் நிலையில், ஒரே நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசி அரசு கஜானாவை காலியாக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு டெண்டர்களையும், ஏல அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கும் திமுக அரசு, சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அனைத்துவித பணிகளையும் இறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதன் மூலம், தேர்தல் செலவுக்காக நிதி ஆதாரங்களை பெருக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஆட்சிக்காலத்தின் இறுதி நேரத்தில் கிடைத்தவரை லாபம் என அரசின் கஜானாவை முழுமையாக காலியாக்கத் துடிக்கும் திமுகவுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், இனி எக்காலத்திற்கும் ஆட்சிக்கு வரவே முடியாத அளவிற்கு தமிழக மக்கள் ஒன்றிணைந்து தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.