சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பகுதி உயர் பாதுகாப்பு வலயம் அல்ல: உறுதிப்டுத்தியது அரசாங்கம்
Meiveli Media Team

அண்மையில் சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பகுதி உயர் பாதுகாப்பு வலயம் அல்லவென அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார். சபாநாயகரே இந்தப் பகுதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக அந்த நேரத்தில் சில உயர் பாதுகாப்பு வலயங்கள் இருந்திருக்கலாம். எனினும், இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதி தற்போது உயர் பாதுகாப்பு வலயம் அல்ல. பாதுகாப்பு படையினரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூடு நடத்த இடத்தில் இருந்து முப்படைகளின் தலைமையகமும், பாதுகாப்பு அமைச்சகமும் 600 முதல் 700 மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார். அது உயர் பாதுகாப்பு வலயம் என்பது பொது மக்களுக்கு கூட தெரியும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியிருந்தார். இதேவேளை, தலங்கம பொலிஸ் பிரிவின் அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி வாகன நிறுத்தும் இடத்தில் கடந்த 13ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
இதில் சட்டத்தரணி ஒருவரும், அவரின் மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

