இஸ்ரேல் வேலைவாய்ப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக நாமல் ராஜபக்ஷ உறுதி
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்து அநீதிக்குள்ளான விண்ணப்பதாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (17) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்வதில் தமக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்கள், நேர்முகத் தேர்வுகளில் சித்தியடைந்தும் பணி நியமனம் கிடைப்பதில் நிலவும் தாமதங்கள் மற்றும் தெரிவுச் செயல்முறைகளில் இடம்பெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விண்ணப்பதாரிகள் தமது கவலைகளை முன்வைத்தனர்.
தமது எதிர்காலம் மற்றும் வாழ்வாதாரம் இந்த வேலைவாய்ப்புகளை நம்பியே அமைந்துள்ளதாகத் தெரிவித்த அவர்கள், தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு தீர்வைப் பெற்றுத்தர முன்வருமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக, இந்த விவகாரம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாதிக்கப்பட்ட தமக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புமாறு அவர்கள் இதன்போது வேண்டுகோள் விடுத்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்ததுடன், அவர்களின் நியாயமான தேவைகள் மற்றும் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் முன்னின்று குரல் கொடுப்பதாக உறுதியளித்தார்.

