இயந்திரங்களைப் பயன்படுத்திச் சூழலை அழிக்காது, பாரம்பரிய கரைவலைத் தொழிலைப் பாதுகாக்கவும் – கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கரைவலைக் கைத்தொழிலுக்காக இயந்திரப் சாதனங்களைப் பயன்படுத்துவதனால் கரையோரச் சூழல் அமைப்பிற்கும் ஏனைய மீனவ சமூகத்தினருக்கும் ஏற்படும் கடுமையான பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாகப் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த அவர்கள் அனைத்து கரைவலை மீனவர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றார்.
உழவு இயந்திரங்கள் (Tractors) மற்றும் விஞ்ச் (Winch) இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராகச் சில பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம், 1984 ஆம் ஆண்டின் கரைவலை ஒழுங்குவிதிகளுக்கு அமைய, கரைவலைக் கைத்தொழில் என்பது இயந்திரச் செயற்பாடுகள் இன்றி, மனித வலுவை மட்டும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பாரம்பரியத் தொழில் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“புதிதாகச் சட்டங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை நடைமுறையிலுள்ள சட்டத்தை அமுல்படுத்துவதே இடம்பெறுகிறது. நாட்டில் இயங்கும் 827 கரைவலைப் பாடுகளில் (Maadel operations) பெரும்பான்மையாக தென் மாகாண மீனவர்கள், இன்றும் எவ்விதப் பிரச்சினையுமின்றி மனித வலுவைக் கொண்டு பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்,” என திரு. கஹவத்த தெரிவித்தார்.
*இயந்திரப் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள்:*
விஞ்சு மற்றும் உழவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதனால் பின்வரும் சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் ஏற்படுவதாகப் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்:
*கடல் தரை அழிவடைதல்:* நிர்ணயிக்கப்பட்ட அளவை விடவும் நீளமான வலைகள் மற்றும் அதிக பாரமான இரும்புத் துண்டுகளைப் பயன்படுத்துவதால் கடல் தரை சுரண்டப்பட்டு முருகைக் கற்கள் மற்றும் மீன் இனப்பெருக்க இடங்கள் அழிவடைதல்.
*கரையோர அரிப்பு:* கரையோரங்களில் பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்துவதனால் கரையோர அரிப்பு ஏற்படுதல் மற்றும் கரையோரச் சூழல் அமைப்புகள் அழிவடைதல்.
*சிறிய மீனவர்களுக்கு இடையூறு: * நிர்ணயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டிப் பாரிய கடற்பரப்பை வளைப்பதனால் சிறிய மீன்பிடிப் படகு உரிமையாளர்களுக்கும் ஏனைய மீனவர்களுக்கும் தொழிலில் ஈடுபடுவதற்குத் தடையை ஏற்படுத்துதல்.
“நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறிக்கொண்டு சட்டவிரோதமான மற்றும் சூழலை அழிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே பாரம்பரிய மீன்பிடித் தொழிலையும், கடல் வளத்தையும் பாதுகாப்பது எமது பொறுப்பாகும்,” என பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.
ஆகையால், ஏனைய மீனவர்களுக்கோ அல்லது சுற்றாடலுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில், சட்டரீதியான கட்டமைப்பிற்குள் நின்று பாரம்பரிய கரைவலைத் தொழிலில் ஈடுபடுமாறு திணைக்களம் அனைத்து கரைவலை உரிமையாளர்களிடமும் தயவுடன் கேட்டுக்கொள்கிறது.

