தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை: அரசாங்கம் தலையிடாவிட்டால் வேலைநிறுத்தம் வெடிக்கும் – தமிழ் முற்போக்குக் கூட்டணி எச்சரிக்கை

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் தற்போதைய பணிச்சுமை தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு தமிழ் முற்போக்குக் கூட்டணியினால் (TPA) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கூட்டணியின் தலைவர்கள் கலந்துகொண்டு ஆக்ரோஷமான கருத்துக்களை முன்வைத்தனர்.

பழைய நடைமுறையையே கம்பெனிகள் திணிக்கின்றன – பழனி திகாம்பரம்

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் கருத்துத் தெரிவிக்கையில்:

“தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 ரூபாய் சம்பளம் உயர்த்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்குப் பதிலாக கம்பெனிகள் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டப் பார்க்கின்றன. முன்னதாக 20 கிலோ பறித்த இடத்தில், தற்போது 25 கிலோ பறிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். இது நியாயமற்றது. இந்த விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும். தவறினால், தொழிலாளர்களைத் திரட்டி மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்போம்.”

நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடியாது – மனோ கணேசன்

கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி கருத்துத் தெரிவிக்கையில்:

“தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 ரூபாய் சம்பளம் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே நாங்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம். ஆனால் தற்போது கம்பெனிக்காரர்கள் மேலதிகமாக கொழுந்து பறிக்குமாறு தொழிலாளர்களை வற்புறுத்துகின்றனர். மேலதிகமாக கொழுந்து பறித்தால் எப்படி சம்பள உயர்வு என்று கூற முடியும்? அரசாங்கம் உருப்படியான வேலைகளைச் செய்தால் நாங்கள் ஆதரவு வழங்குவோம், ஆனால் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நாம் அதனை வன்மையாக எதிர்ப்போம்.”

கூட்டணியின் நிலைப்பாடு

இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பரத் அருள்சாமி உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கத் தாம் எத்தகைய போராட்டத்திற்கும் தயார் என்பதை இதன்போது கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்தினர்.