ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டக்களத்திற்கு விமல் வீரவங்ச விஜயம்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை (Teacher Development Officers), தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இன்று (01) நேரில் சந்தித்தார்.


கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்படும் இந்த போராட்டக்களத்திற்குச் சென்ற அவர், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் உடல்நிலை மற்றும் அவர்களின் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்து கொண்டார்.


இதன்போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த விமல் வீரவங்ச பின்வருமாறு குறிப்பிட்டார்:
“கடந்த தேர்தல் காலங்களில் தற்போதைய ஆட்சியாளர்களாலேயே இந்த உத்தியோகத்தர்களுக்குப் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் தற்போதைய அரசாங்கத்திற்கு உண்டு.”


மேலும், இவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் ஏனைய மட்டங்களிலும் உரிய தலையீடுகளைச் செய்து, தீர்வைப் பெற்றுக்கொடுக்கத் தாம் முன்நிற்பதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
இச்சந்திப்பின் போது தேசிய சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.