இலங்கையின் 78-வது சுதந்திர தின விழா ஒத்திகை மற்றும் விசேட போக்குவரத்து மாற்றங்கள்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தின விழா எதிர்வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” எனும் கருப்பொருளின் கீழ் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.
இந்த விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடவடிக்கைகள் இன்று (ஜனவரி 30) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒத்திகை நடவடிக்கைகளை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தை சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் காலை 7:45 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரையிலும், பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறும் முழு அளவிலான ஒத்திகையின் போது அதிகாலை 5:00 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரையிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுதந்திர மாவத்தை, விஜேராம மாவத்தை, மெயிட்லண்ட் பெலேஸ், பௌத்தாலோக மாவத்தையின் ஒரு பகுதி மற்றும் ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை உள்ளிட்ட பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவசியமான இடங்களில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினமான பிப்ரவரி 4-ஆம் தேதி அதிகாலை 5:00 மணி முதல் விழா நிறைவடையும் வரை ஹோட்டன் சுற்றுவட்டம் முதல் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை வரையான பகுதிகள் உள்ளிட்ட பல வீதிகள் முழுமையாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளை அறிக்கையிட வருகை தரும் ஊடகவியலாளர்களுக்கான விசேட வழிகாட்டல்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளதுடன், நிகழ்வு நடைபெறும் பகுதிக்கு ஊடகவியலாளர்களை அழைத்துச் செல்ல விசேட பஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, அர்த்தமுள்ள வகையில் தேசிய விழாவை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

