போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இரட்சணிய சேனையின் பங்களிப்பு: மேஜர் சந்திரலதா ஜயரத்னசிங்கம் தெரிவிப்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்கான சமூகத் தாக்கங்கள் மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தான வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அதன் தலைமை அலுவலக ஊடக மையத்தில் இன்றைய தினம் (17) நடைபெற்றது.

இச்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இரட்சணிய சேனையின் (Salvation Army) போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் மேஜர் சந்திரலதா ஜயரத்னசிங்கம் தெரிவிக்கையில், இரட்சணிய சேனையானது இங்கிலாந்தில் ஜெனரல் வில்லியம் பூத் என்பவரால் போதைப்பொருளுக்கு அடிமையான மக்களை மீட்கும் நோக்கில் தொடங்கப்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டது எனக் குறிப்பிட்டார்.

சாதி, மத, வர்க்க பாகுபாடுகளின்றி, சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களையும் நாடிச் சென்று சேவை செய்வதே இவ்வமைப்பின் பிரதான நோக்கமாகும் என்றும், ஒரு மனிதனை ஆன்மீக ரீதியாக மட்டுமன்றி, சமூக ரீதியாகவும் முழுமையாகக் கட்டியெழுப்பி, ஒரு சிறந்த பிரஜையாக மாற்றுவதே இரட்சணிய சேனையின் பிரதான இலக்கு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், போதைப்பொருள் பயன்பாட்டினால் நாட்டின் பல குடும்பங்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருவதாக வேதனை வெளியிட்டார்.

இதனைத் தடுக்கும் வகையில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நுவரெலியா போன்ற தொலைதூரப் பகுதிகளிலுள்ள சிறிய வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் மாதமொன்றிற்கு சுமார் 300 குடும்பங்கள், 350 சிறுவர்கள் மற்றும் 250 இளைஞர்களைச் சென்றடைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மட்டுமன்றி யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அனுராதபுரம் போன்ற நாட்டின் பல பகுதிகளிலும் இச்சேவைகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், புனர்வாழ்வு பெற விரும்பும் நபர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி, உரிய புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீள விரும்புபவர்கள், புனர்வாழ்வு அல்லது ஆலோசனைகளைப் பெற விரும்புபவர்கள் 24 மணிநேரமும் இயங்கும் 077 6626 727 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.