இலங்கை மத்திய வங்கிக்கு எதிராக சிவில் புலனாய்வு முன்னணி சாடல்: முதலீட்டாளர்கள் நேரடியாக விவசாயிகளுடன் இணைவதால் வங்கி மாஃபியா வீழ்ச்சி!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதி நிறுவனங்கள் மூலம் பெருமளவிலான நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சிவில் புலனாய்வு முன்னணியின் அழைப்பாளர் சஞ்சய மஹவத்த குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மத்திய வங்கியினால் கண்காணிக்கப்படும் நிறுவனங்களில் பெருந்தொகை நிதி மோசடி செய்யப்பட்டுள்ள போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி இதுவரை எவ்வித நீதியையும் நிலைநாட்டவில்லை என அவர் குறிப்பிட்டதுடன், பொதுமக்கள் எவ்வளவு தொகையை வைப்பு செய்திருந்தாலும், மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்குட்பட்ட நிறுவனமொன்று முடங்கும்போது பாதிக்கப்பட்ட வைப்பாளர்களுக்கு அதிகபட்சமாக 11 லட்சம் ரூபா மட்டுமே இழப்பீடாகக் கிடைப்பதாக சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழலில் நாட்டில் புதியதொரு வணிக வேளாண்மைப் புரட்சி ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் காரணமாக முதலீட்டாளர்கள் எவரும் இனி வங்கிகளை நாடிச் செல்வதில்லை என்றும், மாறாக முதலீட்டாளர்கள் நேரடியாகவே விவசாயிகளுடன் இணைந்து ஒரு புதிய தொழில்முனைவுச் சமூகத்தைக் கட்டியெழுப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

இதன் விளைவாக வங்கிகளால் இனி தங்களது நிதி மாஃபியாவை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றம் காரணமாகவே மத்திய வங்கியின் ஆளுநர் தற்பொழுது கடும் அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.