ரூ. 9 கோடி பெறுமதியுடைய கொக்கெய்னுடன் கட்டுநாயக்கவில் மலேசிய வாலிபர் கைது!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கெய்ன் போதைப்பொருள் தொகையை தனது பயணப்பொதியில் மறைத்து வைத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் எவ்வித பொருட்களும் பிரகடனப்படுத்த அவசியமற்ற “பசுமை வழி” (Green Channel) ஊடாக வெளியேற முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர் இன்று (18) காலை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மலேசியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவருக்கு மலேசிய ரிங்கிட் 10,000 பணம் வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பேரிலேயே இந்த போதைப்பொருள் தொகை இலங்கைக்கு கடத்தி வரப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இவர் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து இந்த போதைப்பொருள் தொகையைப் பெற்றுக்கொண்டு, அங்கிருந்து துபாய் சென்று, பின்னர் எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் இன்று காலை 09:30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அங்கு அவர் கொண்டு வந்த பயணப்பொதியை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் இருந்த 3 சாக்லேட் இனிப்பு பண்ட (Chocolate Toffee) டப்பாக்களுக்குள் 92 கப்சூல் மாத்திரைகளாக மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, 1 கிலோகிராம் 816 கிராம் எடையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

தற்போது கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பயணி மற்றும் கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் தொகை ஆகியன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.