“முன்னர் பதுங்கியிருந்தவர்கள் இன்று நீதி அமைச்சரை விலகக் கோருவது வேடிக்கையானது” – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

மகர, வெலிக்கடை மற்றும் தங்காலை போன்ற சிறைச் சாலைகளில் கடந்த காலங்களில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றபோது, மக்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் பயந்து வீடுகளில் கட்டில்களுக்கு அடியில் பூனைக்குட்டிகளைப் போல் ஒளிந்திருந்தவர்கள், இன்று நாட்டின் நீதி அமைச்சரை பதவி விலகுமாறு கோருவது ஒரு வேடிக்கையான விடயமாகும் என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் (15) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீதி அமைச்சர் தனது பொறுப்புகளைச் சரியாகவே நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்த அவர், இச்சம்பவத்தின் பின்னர் அரசாங்கம் என்ற ரீதியில் எமது பொறுப்பினை நாம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் தற்போதே எடுத்துள்ளோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து மேலும் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர், எதிர்க்கட்சியினர் கொண்டுவரத் திட்டமிடும் இவ்வாறான வெற்று நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றார்.

இதற்கு முன்னரும் அவர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைகளைக் கொண்டுவரப்போவதாகப் பெரும் கூச்சலிட்ட போதிலும், அவர்களால் எதனையும் செய்ய முடியாமல் போனதை நினைவு கூர்ந்த அவர், அவர்கள் எத்தனை நம்பிக்கையில்லா பிரேரணைகளை வேண்டுமானாலும் தாராளமாகக் கொண்டுவரட்டும் என சவால் விடுத்தார்.

அத்துடன், பொதுமக்கள் எமக்கு வழங்கிய பொறுப்புகளையும் நம்பிக்கையையும் சிதைத்து, நாம் செயற்படத் தவறினால் மட்டுமே அது குறித்து எமது அரசாங்கத் தரப்பு முடிவெடுக்க வேண்டுமே தவிர, எதிர்க்கட்சியினரின் அரசியல் தேவைகளுக்காகவோ அல்லது அவர்களின் வெற்றுப் பிரேரணைகளுக்காகவோ நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மேலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.