8 மாதங்களின் பின் கடுகண்ணாவ நிலையத்திற்கு வந்தடைந்தது புகையிரதம்: மலையகப் பாதையை சீரமைக்க தீவிர நடவடிக்கை!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கடந்த ஆண்டு நாட்டைத் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளி காரணமாக மலையகப் புகையிரத வீதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கடுமையான சேதங்களை அடுத்து, சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக கடுகண்ணாவ புகையிரத நிலையத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்றைய தினம் முதலாவது புகையிரதம் கடுகண்ணாவ நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இன்று கடுகண்ணாவ வந்தடைந்த புகையிரதமும் அதன் பெட்டிகளும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டியிலிருந்து பேராதனை ஊடாக இப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டவையாகும். ‘டிட்வா’ சூறாவளியால் கடுகண்ணாவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலையகப் பகுதிகளில் தண்டவாளங்கள் சேதமடைந்ததுடன், பல இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டதால் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி இப்பாதையூடான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மலையகப் புகையிரதப் பாதையின் அத்தியாவசிய மறுசீரமைப்பு மற்றும் விசேட நடுத்தர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவே இந்த புகையிரதம் தற்போது இப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது முதற்கட்டமாக இந்த பராமரிப்புப் பணிகளுக்கான புகையிரதம் இயக்கப்பட்டுள்ளதால், விரைவில் இப்பாதையில் சாதாரண பயணிகள் போக்குவரத்து சேவைகளும் வழமைக்குத் திரும்பும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்த மேலதிக விபரங்களை புகையிரத திணைக்களம் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.