“இராணுவ வீரர்கள் பெற்ற பதக்கங்களை ‘இரும்புத் துண்டுகள்’ எனக் கூறுவது வெட்கக்கேடானது!” – மாத்தறையில் நாமல் ராஜபக்ஷ காட்டம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்து இராணுவ வீரர்கள் பெற்ற வெற்றிகளையும் அவர்களின் கௌரவத்தையும் தற்போதைய அரசாங்கம் சிறுமைப்படுத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று இரவு (ஜூலை 04) மாத்தறை – கொடபொல பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டு கொழும்பில் டை, கோட் அணிந்து திரியும் அதிகாரிகளுக்கு, நமது இராணுவ வீரர்கள் பெருமையுடன் பார்க்கும் வகையில் பெற்றுக்கொண்ட பதக்கங்கள் வெறும் ‘இரும்புத் துண்டுகளாகத்’ தெரியலாம் எனக் குறிப்பிட்டார்.

ஆனால், அந்தப் பதக்கங்களுக்குப் பின்னால் இருப்பது மரணத்திற்கும் வாழ்விற்கும் இடைப்பட்ட ஒரு பெரும் போராட்டம் என்றும், இன்று இந்த நாட்டு மக்கள் சுதந்திரமாக மூச்சு விடுவதற்குக் காரணம் அன்று போர்க்களத்தில் இரத்தம் சிந்திய எமது இராணுவ வீரர்களே ஆகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் தற்போதைய நகர்வுகள் குறித்து மேலும் விவரித்த அவர், கடந்த காலத்தில் எமது அரசாங்கம் மேற்கொண்ட கொழும்பு துறைமுக நகரம், நெலும் குளுன, அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற திட்டங்களை ‘திருட்டுத் திட்டங்கள்’ என்று அன்று விமர்சித்த ஜே.வி.பி (JVP), இன்று அதே திட்டங்களை சர்வதேச முதலீட்டாளர்களிடம் காட்டிப் பெருமை பேசி வருவதாகக் குற்றஞ்சாட்டினார். தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அன்று தம்மால் எதிர்க்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு துறைமுக நகரத்தையே நாட்டின் பொருளாதார மையமாக இன்று ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேநேரம் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, உர மூடை ஒன்றின் விலை 15,000 முதல் 20,000 ரூபா வரை உயர்ந்துள்ளதாகவும், அரசாங்கம் உரிய நேரத்தில் உர மானியங்களை வழங்குவதில்லை என்றும் கூறினார். உள்நாட்டு நெல் களஞ்சியங்கள் தேங்கிக் கிடக்கையில், அரசாங்கம் திட்டமிட்டு வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து விவசாயிகளின் பொருளாதாரத்தை அழிப்பதாக அவர் கவலை வெளியிட்டார்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உலகளாவிய நெருக்கடிகள் இருந்தபோதும் மக்கள் மீது அநியாய வரிகள் விதிக்கப்படவில்லை என நினைவூட்டிய அவர், இன்று மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை மற்றும் வரிகள் மூலம் மக்கள் தாங்க முடியாத சுமையை எதிர்கொள்வதாகவும், 100 ரூபா விலையை உயர்த்திவிட்டு 20 ரூபாவை குறைத்து அரசாங்கம் நாடகமாடுவதாகவும் சாடினார்.
அரசாங்கத்தின் அடக்குமுறைகள் குறித்துப் பேசிய அவர், உரம் இல்லை என்று கூறும் விவசாயிகளை பொலிஸாரைக் கொண்டு மிரட்டும் நிலை காணப்படுவதாகவும், உரிமைகளுக்காக வீதிக்கிறங்கும் பட்டதாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், மீனவர்களுக்கு ‘எஸ்.எம்.எஸ்’ (SMS) மூலம் மீன் இருக்கும் இடத்தை காட்டுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று மீனவர்கள் படகுகளுக்கு எரிபொருள் அடிக்கக்கூட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். மாகாண சபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலை நடத்தினாலும் தங்களுக்குப் பலத்த அடி விழும் என்பதால் அரசாங்கம் தேர்தலைத் தவிர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக, மகா சங்கத்தினரை (பௌத்த துறவிகளை) அவமதிப்பதன் மூலமும், அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதன் மூலமும் மக்களின் பசியைத் தீர்த்துவிட முடியாது என எச்சரித்த நாமல் ராஜபக்ஷ, நாட்டு மக்களின் யதார்த்த நிலையை உணர்ந்த, பொய் கூறாத, சர்வதேசத்துடன் சுமுகமாகப் பழகக்கூடிய ஒரு பலமிக்க தேசிய சக்தியைக் கட்டியெழுப்ப தங்களோடு கைகோர்க்குமாறு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.