ருவன்வெலிசேய சூடாமணிக்கல் மோசடி: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சிவில் அமைப்புகள் புதிய முறைப்பாடு!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ருவன்வெலிசேய மகா சாய விகாரையின் சூடாமணிக்கல்லில் இருந்த சுமார் 1,500 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள் திருடப்பட்டமை குறித்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) புதிய முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘சிவ் ஹெள பொது பவுர’ அமைப்பின் மலியதேவ தேரர், இசுருமினியே சித்தார்த்த தேரர் மற்றும் சிவில் ஆர்வலர் துலான் சேனாதீர ஆகியோரால் இந்த முறைப்பாடு நேற்று கையளிக்கப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டில், ருவன்வெலிசேய மகா சாய விகாரையின் அசல் சூடாமணிக்கல் கழற்றப்பட்டு, அதற்குப் பதிலாக வேறு ஒரு சூடாமணிக்கல் பொருத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதன்போது, அசல் சூடாமணிக்கல்லில் இருந்த சுமார் 1,500 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள் திருடப்பட்டுள்ளதாகவும், அன்றைய காலகட்டத்தில் ருவன்வெலிசேய விகாரைக்குப் பொறுப்பாக இருந்த பல்லேகம ஹேமரதன தேரர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தற்சமயம் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் தொழிலதிபர் விரஞ்சித் தாம்புகல ஆகியோர் இணைந்து இந்தத் திருட்டைப் புரிந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பல்லேகம ஹேமரதன தேரருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பைப் பயன்படுத்தியே இந்த பாரிய மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய காலகட்டத்தில் இந்த விவகாரம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கத்தின் பின்னணியில் ‘திருடனின் தாயிடம் மை போட்டுப் பார்ப்பது போல’ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அன்றைய பணிப்பாளர் முறைப்பாடு செய்த நபர்களையே கைது செய்திருந்ததாக சிவில் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், அசல் சூடாமணிக்கல் இல்லாத ஒரு தருணத்திலேயே கோட்டாபய ராஜபக்ஷ ருவன்வெலிசேயவிற்கு முன்னால் ஜனாதிபதியாகப் பதவியேற்றதாகவும், இன்று அவர்களுக்கு அதற்கான கர்மவினை பலித்துள்ளதாகவும் அவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
விரஞ்சித் தாம்புகல மற்றும் ஹேமரதன தேரர் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிலவுவதுடன், கோட்டாபய ராஜபக்ஷ உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் குற்றவாளியாகக் கருதப்படுபவர் என்றும் அவர்கள் இதன்போது சாடினர்.
தற்போது நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படும் அரசாங்கம் ஒன்று பதவியில் இருப்பதால், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மகா விபரீத மோசடி குறித்து விரிவாக ஆராய விசேட அதிகாரிகள் குழுவொன்றை நியமித்து, விசாரணைகளை விரைவுபடுத்தி, இதனுடன் தொடர்புடைய அனைத்து வழுவாளிகளுக்கும் தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுக்குமாறு சிவில் அமைப்புகள் மற்றும் மகா சங்கத்தினர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.


