“அரசாங்கம் நீதிமன்றத்தை மிகக் கேவலமான முறையில் கையாள முயற்சிக்கிறது” – சாகர காரியவசம் குற்றச்சாட்டு!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியில் தலையீடு செய்து, தங்களுக்குத் தேவையான முறையில் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் மிகக் கேவலமான முறையில் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (22.06.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தின் ஆட்சி என்பது மிக முக்கியமானதொன்றாகும் என்றும், பொதுமக்கள் தேர்தல்களின் போது ஏமாற்றப்பட்டு, தகுதியற்ற நபர்களுக்கு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கிய பல உதாரணங்கள் அண்மைய வரலாற்றில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். எனினும், அவ்வாறான சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தி, ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் சமநிலையைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரே நிறுவனம் நீதிமன்றமாகும் என்றும், நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் அநீதி இழைக்கப்படும் போது அவர்கள் நாடக்கூடிய ஒரே இடம் நீதிமன்றம் மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத்திற்குச் சென்றால் தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என்ற போதிலும், இன்று நாட்டின் நீதித்துறை மற்றும் சட்டத்தின் ஆட்சியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கும், அதனை அழிப்பதற்கும் தற்போதைய அரசாங்கம் வெட்கமற்ற முறையில் முயற்சிப்பதை நாம் காண்கிறோம் என அவர் குற்றம் சாட்டினார்.
முன்னர் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் சட்டத்தின் ஆட்சி இவ்வாறுதான் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்று சுட்டிக்காட்டிய அவர், அப்போது தற்போதைய ஜனாதிபதி ஊழல் ஒழிப்பு குழுவின் முக்கிய பதவியை வகித்ததுடன், தற்போதைய பொலிஸ் அமைச்சர் அதன் செயலாளராகவும், ஷானி அபேசேகர சி.ஐ.டி (CID) இன் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டு சட்டத்தை முழுமையாகத் தவறாகப் பயன்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறினார்.
இன்று அதே குழுவினர் மீண்டும் ஒன்றிணைந்து சட்டத்தை வளைக்க முற்படுவதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்தைச் சேர்ந்த நீதி அமைச்சர் நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டே, ‘தங்கள் அரசாங்கம் ஆட்சியில் இல்லாவிட்டால் இவ்வாறான தீர்ப்பு கிடைத்திருக்காது’ என்று பகிரங்கமாகக் கூறுவதாகவும், மறுபுறம் ஜனாதிபதி மே தினப் பேரணியில் உரையாற்றும் போது ‘நாட்களைக் கணக்கிட்டு சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்’ என எச்சரிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இவை ஒரு ஜனநாயக சமூகத்திற்கு மிக மோசமான முன்னுதாரணங்கள் என்பதுடன், இவ்வாறான கருத்துக்கள் நீதிபதிகளின் கௌரவத்தைப் பாதித்து அவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது உயர் நீதிமன்றத்தில் 04 நீதிபதிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிவித்த சாகர காரியவசம், இந்த வெற்றிடங்களை நிரப்பாமல் இழுத்தடிப்பதன் மூலம் நீதிபதிகளுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுவதாகக் குறிப்பிட்டார். இந்த நியமனங்களைச் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ள போதிலும், இந்த வெற்றிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதன் மூலம் அனைத்து நீதிபதிகளையும் தங்களது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும், தங்களுக்குத் தேவையான பழிவாங்கல்களைச் செய்வதற்கே இந்த ஒடுக்குமுறைகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சாடினார்.
அரசியலமைப்பின் 107வது உறுப்புரை நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாப்பது தொடர்பானது என விவரித்த அவர், அதன்படி உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இ
ந்த ஓய்வுபெறும் வயதை மாற்றுமாறு நாட்டின் சட்ட வல்லுநர்களோ அல்லது சமூகமோ இதுவரை எந்தவொரு கோரிக்கையையும் விடுக்காத பின்னணியில், தங்களுக்குச் சாதகமான நீதிபதிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தற்போது முயற்சித்து வருவதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும், இதற்கு சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கும், தங்களுக்குத் தேவையானவாறு தீர்ப்புகளை எழுதுவதற்கும் நீதிமன்றத்தைக் கையாள்வதே இதன் பின்னாலுள்ள உண்மையான நோக்கமாகும் என அவர் மேலும் கூறினார்.
அதேபோல், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் அண்மையில் மேற்கொண்ட தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக இதுவரை எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும், இதுகுறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவும் நீதித்துறையும் மௌனம் காப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அரசாங்கத்தின் ஊழல்களைப் பற்றி அறிந்திருந்த நபர்கள் மர்மமான முறையில் இறப்பதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் தவறுகளை வெளிப்படுத்திய நந்தன குணதிலக்கவின் மரணம் இன்றுவரை ஒரு மர்மமாகவே நீடிப்பதாகக் குறிப்பிட்டார்.
எனவே, நாட்டின் பொதுமக்களிடம் தாம் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்த சாகர காரியவசம், பொதுமக்கள் கடந்த காலங்களில் எந்தக் கட்சிக்கு வாக்களித்திருந்தாலும் அது முக்கியமல்ல என்றும், ஆனால் இலங்கைப் பிரஜை என்ற ரீதியில் தங்களுடைய சுதந்திரமும், தங்களது பிள்ளைகளின் எதிர்காலச் சுதந்திரமும் முக்கியமென்றால், அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான மற்றும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

