சித்திரவதைகளுக்கு எதிராக அரசாங்கம் “பூச்சிய சகிப்புத்தன்மை” கொள்கையை கடைப்பிடிக்கிறது – ஐநாவிடம் அமைச்சர் விஜித ஹேரத் திட்டவட்டம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையில் சித்திரவதைகளை ஒழிப்பது மற்றும் தடுப்பது தொடர்பாக தற்போதைய அரசாங்கம் தெளிவான “பூச்சிய சகிப்புத்தன்மை” (Zero Tolerance Policy) கொள்கையையே திட்டவட்டமாக கடைப்பிடித்து வருவதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான துணைக் குழுவின் (SPT) சிறப்பு நான்கு பேர் கொண்ட தூதுக்குழுவினருடன் இன்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஐநா தூதுக்குழுவினர், ஜூன் 15 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.
இன்றைய சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய வெளிநாட்டு அமைச்சர், சித்திரவதைகளுக்கு எதிரான இந்த பூச்சிய சகிப்புத்தன்மைக் கொள்கையை நாட்டில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக சட்டமன்ற, நிர்வாக மற்றும் நிறுவன ரீதியான பல முக்கிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
ஒன்பது பிரதான சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளிலும் (09 core international human rights Treaties) இலங்கை ஒரு பங்காளியாக கையெழுத்திட்டுள்ள நாடாகும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், ஐநா தூதுக்குழுவின் இந்த விஜயமானது இலங்கை தானாக முன்வந்து ஏற்றுக்கொண்ட சர்வதேசப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் அரசாங்கத்திற்கு இருக்கும் அர்ப்பணிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகிறது எனத் தெரிவித்தார்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கும், நல்லாட்சியை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அவர் மீண்டும் இங்கு உறுதிப்படுத்தியதோடு, இலங்கை அரசாங்கம் இந்தத் துணைக் குழுவுடன் வெளிப்படையான, முற்போக்கான மற்றும் நம்பகமான முறையில் இணைந்து பணியாற்றும் என்றும், நாட்டின் அரசியலமைப்பிற்கு இணங்க அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ‘சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான, மனிதநேயமற்ற அல்லது அவமதிப்பான நடாத்துகை அல்லது தண்டனைக்கு எதிரான உடன்படிக்கையின் மாற்று நெறிமுறைக்கு’ (OPCAT) ஒப்புதல் அளித்திருந்ததைத் தொடர்ந்து, ஐநா சித்திரவதைகளைத் தடுப்பதற்கான துணைக் குழு தனது முதலாவது இலங்கை விஜயத்தை கடந்த 2019 ஏப்ரல் மாதத்தில் மேற்கொண்டிருந்தது. அதன் இரண்டாவது விஜயமாக, ஆயிஷா ஷுஜூன் முஹம்மது (Ms. Aisha Shujune Muhammad – மாலைத்தீவு) தலைமையிலான தூதுக்குழுவினர் தற்போது இலங்கை வந்துள்ளனர்.
இன்றைய கலந்துரையாடலில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி உயர் அரச அதிகாரிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


