மாகாண சபை விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் இழுப்பது சரியல்ல: மனோ தெரிவிப்பு
Meiveli Media Team

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை அல்லது மாகாண சபைத் தேர்தல் விவகாரங்களில் இந்தியாவை மீண்டும் தலையீடு செய்ய அழைப்பது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நன்மை தராது என தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவர், 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் உருவான மாகாண சபை முறை மற்றும் வடக்கு–கிழக்கு இணைப்பு வாய்ப்பை தமிழ்த் தேசியக் கட்சிகள் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறினார். இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியாவுக்கு வரலாற்று மற்றும் தார்மீகப் பொறுப்பு இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர், தற்போதைய உலக அரசியல் சூழலில் இந்தியா நேரடியாக தலையிடும் நிலை இல்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், 13ஆவது திருத்தம் இலங்கையின் அரசமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதால், அதனைத் தொடர்வதா, மாற்றுவதா அல்லது நீக்குவதா என்பது இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டிய விடயம் என வலியுறுத்தினார். மாகாண சபைகளை அதிகாரப் பகிர்வு தளமாகப் பயன்படுத்தாமல் கட்சி அரசியல் மேடையாக மாற்றியதால் அதன் மீதான மக்கள் நம்பிக்கை குறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல் தீர்வுகளுக்காக இந்தியாவை சார்ந்திருப்பதை விட, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

