2ஆம் சங்கிலிய மன்னனின் சிரார்த்த தின நிகழ்வுகளை அரண்மனையில் சனிக்கிழமை நடத்த ஏற்பாடு
Meiveli Media Team

இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு யாழில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் அரண்மனையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக சங்கிலிய மன்னன் அறக்கட்டளையின் செயலாளர் சிவத்தொண்டர் சிறீந்திரன் தெரிவித்தார். யாழில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு அரும்பாடுபட்ட இரண்டாம் சங்கிலிய மன்னனின் சிரார்த்த தினத்தை ஏழு வருடங்களாக செய்து வருகிறோம். அந்த வகையில் எதிர்வரும் சனிக்கிழமை6ம் திகதி காலை 9 மணிக்கு யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சங்கிலிய மன்னனின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஜமுனா ஏரிப் பகுதிக்கு ஊர்வலமாக சென்று பூஜை வழிபாடுகள் நடத்தப்படும். பின்னர் சங்கிலிய மன்னனின் அரண்மனையில் நிகழ்வுகள் ஆரம்பமாகும். இம்முறை விசேடமாக சங்கிலிய மன்னனின் வாழ்க்கை வரலாற்றை கண்காட்சியாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் குறித்த நிகழ்வுக்கு சைவ அடியவர்கள் அனைவரும் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என மேலும் குறிப்பிட்டார்.

