அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் : சிறீலங்காவில் மரணித்தவர்களைக் கணக்கிடல்
Meiveli Media Team

சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்ததன் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான வேலைத்திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவாய்வுக் குழு ஆகியவை போரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளன. இந்த முயற்சி, போரின் காரணமாக உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை புள்ளிவிவர அடிப்படையில் மதிப்பிடுவதாகும். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள், தங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அயலவர்களிடமிருந்து உயிரிழந்தவர்களின் பெயர்கள் மற்றும் தகவல்களை சேகரித்து வழங்குமாறு அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன. அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சுக்கா, ‘இறந்தவர்களின் பெயர்களைப் பதிவுசெய்வது அவர்களுக்கு நாம் செய்யக்கூடிய ஒரு முக்கியமான மரியாதையாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்தத் திட்டம் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து தகவல்களை சேகரிப்பதை மையமாகக் கொண்டிருந்தாலும், பின்னர் போரில் உயிரிழந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் தகவல்களையும் சேர்க்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள உயிரிழந்தவர்களின் பட்டியல்கள் அல்லது தொடர்புடைய தகவல்கள் இருப்பின், அவற்றை பகிர்ந்து ஒத்துழைக்குமாறும் அமைப்புகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
தகவல்களை HRDAG மற்றும் ITJP ஆகிய அமைப்புக்களுக்கு அனுப்பவேண்டிய முகவரி: itjpsl@gmail.com or info@hrdag.org

