2025 முதல் 2029 வரையிலான ஐந்தாண்டுகளில் தாதியர்சேவையில் 13,600 புதிய தாதியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நோக்கத்தின் 50% இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யப்டும் – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய அரசாங்கத்தின் 2025 முதல் 2029 வரையான ஐந்து வருடங்களில் 13,600 தாதியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும், இன்றைய நியமனங்களுடன் 30% இலக்கை பூர்த்தி செய்துள்ளதாகவும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 2,867 தாதியர் நியமனங்களுடன் 50% இலக்கை பூர்த்தி செய்யவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கையில் இலவச சுகாதார சேவையின் மனித வளம், மற்றும் வினைத்திறனை அதிகரிக்கும் வகையில் 515 (BSc Nursing) தாதியர்களுக்கு தாதி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (29) கொழும்பு 07 இலங்கை மன்றத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தரம் III தாதிகளாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இந்த உத்தியோகத்தர்கள் அரச பல்கலைக்கழகங்களில் அறிவியலில் தாதியர் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து உள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள் மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் உள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கை மற்றும் சேவையின் அவசியத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு கவனத்தில் எடுத்துள்ளது.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போது இலங்கையில் தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்கள் சிறிது சிறிதாக நிரப்பப்பட்டு வருவதாகவும், தாதியர் பாடசாலைகளில் இருந்து கடந்த வருடம் பயிற்சி முடித்த 3441 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட எண்ணிக்கையில் கூடிய் குழுவாகவும், இன்று நியமனம் பெறும் இந்த 515 பேருடன் கடந்த வருடத்தில் 3956 பேர் சேவையில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் மேலும் 2867 பேர் தாதியர் சேவையில் உள்வாங்கப்படவுள்ளதாகவும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் புதிதாக 6823 பேர் தாதியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக, 2028 ஆம் ஆண்டில் 1949 பேர் கொண்ட குழுவும், 2029 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 2920 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தாதியர் பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானப் பட்டதாரிகளாக ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டு தேவையான இலக்கை பூர்த்தி செய்ய தாம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் சுகாதார சேவையை விரிவுபடுத்தும் வழிகள் மற்றும் உலகின் அளவுகோல்களை கருத்திற்கொண்டு அடுத்த சில வருடங்களுக்கு இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அந்த இலக்குகளை நோக்கி அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க இங்கு உரையாற்றுகையில், தாதியர் சேவையானது இந்நாட்டின் ஒரு தனித்துவமான சேவையாகும் என தெரிவித்தார்.
அறிவியல் பிரிவில் மூன்றாம் நிலை (Grade III) பதவிகளுக்கான செவிலியர் பட்டதாரிகளின் இறுதியாக ஆட்சேர்ப்பு 2021-ல் நடைபெற்றது.
அதன்படி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆட்சேர்ப்புகள் நடைபெறுவது ஒரு விசேட நிகழ்வாகும்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர்களான ஜனக கித்சிறி குணவர்தன, சாமிக்க எச்.கமகே, விசேட வைத்தியர் குமார விக்கிரமசிங்க, கே.பி. யோக சந்திரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சம்பிகா விக்கிரமசிங்க, பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் சுரங்க டோலமுல்ல, சுமேதா பிரியபாஷினி, ஹர்ஷபிரிய சிசிர குமார, இலங்கை மன்றத்தின் தலைவி சீதா பண்டார, அமைச்சின் பணிப்பாளர்கள், அதிகாரிகள், வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள், தாதியர் பாடசாலைகளின் அதிபர்கள், தாதியர் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.





