தனது பணிகளுக்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்துவதாக ஊடகவியலாளர் முறைப்பாடு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இரட்டைக் கொலை வழக்கில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது, தனது கடமைக்கு இடையூறு விளைவித்ததோடு, தன்னை அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக மலையக் தமிழ் ஊடவியலாளர் ஒருவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மபாதுகாப்புச் செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹட்டன், டிக்கோயா நகரில் கணவன் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு, பெண் அணிந்திருந்த 18 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர் ஒருவரை, கடந்த 23ஆம் திகதி, பொகவந்தலாவை பெற்றோசோ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையின்போது தான் கைத்தொலைபேசியில் காணொளி பதிவு செய்துகொண்டிருந்ததாகவும், அப்போது ஒரு பொலிஸ் அதிகாரி கைத்தொலைபேசியே பறித்து அதில் இருந்த அனைத்து காணொளிகளையும் அழித்ததாகவும், சுயாதீன ஊடகவியலாளர் சாம்பசிவம் சதீஸ்குமார் கூறுகிறார்.

தொடர்ந்து காணொளி பதிவு செய்தால், கொலை வழக்கில் தன்னைச் சிக்க வைத்து கைது செய்வதாக அந்த அதிகாரி அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

“ஹட்டன் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நிரஞ்சன் என்ற கான்ஸ்டபிள் என்கைத்தொலைபேசியே வலுக்கட்டாயமாகப் பறித்து, அதில் இருந்த அனைத்து காணொளிகளையும் அழித்தார். நான் ஒரு உள்ளூர் ஊடகவியலாளர் எனவும், அரச தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை என்னிடம் இருப்பதாக அவரிடம் கூறி, அடையாள அட்டையை அவரிடம் காண்பித்தேன். ஆனால் என் கைத்தொலைபேசியே வலுக்கட்டாயமாகப் பறித்து, காணொளிகளை அழித்தார். அப்போது, இந்த சம்பவத்தை மீண்டும் வீடியோ பதிவு செய்தால், இந்தக் கொலையில் எனக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி, கைது செய்வேன் என அந்த அதிகாரி அச்சுறுத்தினார்.” என ஊடகவியலாளர் சதீஸ்குமார் கூறுகிறார்

இது தொடர்பாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மபாதுகாப்புச் செயலாளரிடம் இணையவழியில் முறைப்பாடு அளித்துள்ளதாகக் கூறும் சதீஸ்குமார், தனது உத்தியோகபூர்வ அடையாள அட்டையைக் காட்டியும், தனது கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அச்சுறுத்திய அநீதிக்கு, அதிகாரிகள் நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

“அரச தகவல் திணைக்களத்தால் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தாலும், சம்பவ இடத்திற்குச் சென்று தகவல் சேகரிக்க பொலிஸார் அனுமதிக்கப்பதில்லை. இதுபோன்ற சம்பவங்கள் எனக்குத் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்த அரசாங்கமும், தொடர்புடைய அதிகாரிகளும் நீதியை வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.”

ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு, பெண் அணிந்திருந்த 18 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர் ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹாலிஎல, தெமோதரை பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான செல்லையா மனோஜ் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.