கொழும்பில் பதற்றம் – ரணவிரு நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தத் தடை: விமல் வீரவன்ச மற்றும் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு; பதற்றமான சூழல்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையில் இன்று (மே 18) போர்வீரர்களை (ரணவிரு) நினைவுகூரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துவதற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பும் அமைதியற்ற சூழலும் ஏற்பட்டது.

எந்தவொரு நாட்டின் குடிமகனுக்கும் நாட்டைப் பாதுகாத்த மாவீரர்களை மலர் தூவி கௌரவிப்பதற்கும், நினைவு கூருவதற்கும் முழுமையான உரிமை இருக்க வேண்டும் எனத் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போரில் உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரை கௌரவிப்பதற்காக விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் மலர் வளையங்களுடன் சென்றிருந்த போது, பாதுகாப்புப் பிரிவினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்தத் தடையானது அங்கு கூடியிருந்த தேசப்பற்றாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது. இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச, நாட்டில் அமைதியை நிலைநாட்ட உயிரைத் தந்த எமது போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த சாதாரண குடிமக்களுக்கு உரிமை இல்லையா எனக் கேள்வி எழுப்பியதுடன், தமிழ் டயஸ்போராவின் அழுத்தங்களுக்கும், அவர்களின் மனக்கசப்பிற்கும் பயந்து கொண்டே அரசாங்கத்தினால் இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் குற்றம் சாட்டினார்.

ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி இலங்கையில் இருவேறு விதமாக நினைவு கூரப்படுகிறது. வடக்கில் போரில் உயிரிழந்த தமிழ் மக்கள் மற்றும் போராளிகளை நினைவுகூரும் “முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகவும்”, தெற்கில் போரை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரை நினைவுகூரும் “ரணவிரு நாளாகவும்” இது அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும், இன்றைய தினம் விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தத் தடை விதிக்கப்பட்டமையானது, சர்வதேச அரசியல் அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டு நல்லிணக்கத்தைக் காப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கத்தின் தந்திரோபாய நகர்வுகளே காரணம் என அரசியல் விமரிசகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புலம்பெயர் அமைப்புகளின் அதிருப்தியைச் சம்பாதிக்கக் கூடாது என்ற நோக்கில், சொந்த நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை விமல் வீரவன்ச தரப்பு பலமாக முன்வைத்துள்ளது.

தற்போது நினைவிடத்தைச் சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக சமூக ஊடகங்களிலும் அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராகக் கடுமையான விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன.

நாட்டின் இறையாண்மையைக் காத்தவர்களை நினைவுகூரும் உரிமை அனைத்துப் புவிசார் அரசியலுக்கும் அப்பாற்பட்டது என்பதே இவர்களின் அசைக்க முடியாத கருத்தாக உள்ளது.

Update

ரணவிரு நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தச் சென்ற விமல் வீரவங்சவிற்கு அனுமதி மறுப்பு: பொலிஸாருடன் தள்ளுமுள்ளு; இருவர் கைது செய்யப்பட்டு விடுதலை!

நாட்டை அச்சுறுத்திய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையின் போது தாய்நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த மற்றும் பங்களிப்பு வழங்கிய அனைத்து வீரமிக்க ரணவிருக்களையும் நினைவுகூர்ந்து, நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, சிவில் சமூக அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் அங்கு வருகை தந்திருந்தனர்.

இருப்பினும், விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் சென்று மலரஞ்சலி செலுத்த பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் அனுமதி வழங்கவில்லை.

இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், “இரண்டு நிமிடங்கள் தாருங்கள், கேட்டுவிட்டுச் சொல்கிறேன்” எனக் கூறி உயர் அதிகாரி ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். அந்த அழைப்பின் போது, “இன்றைய தினம் எவரையும் ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் செல்ல அனுமதிக்க வேண்டாம்” என உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த பொலிஸாருக்கும் விமல் வீரவங்சவின் குழுவினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டு அவ்விடத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவானது.

இந்த பாதுகாப்புப் பிரிவினரின் தடைகளையும் தள்ளுமுள்ளுகளையும் மீறி விமல் வீரவங்ச நினைவுத் தூபியை நோக்கி முன்னேறினார். எனினும், தூபியின் பிரதான பகுதிக்குச் சென்று அஞ்சலி செலுத்த பொலிஸார் இடமளிக்காததால், அவர் அதற்கு அருகாமையிலுள்ள தரையில் மலர்களை வைத்து தனது அஞ்சலியைச் செலுத்தினார்.

இந்த தள்ளுமுள்ளுப் போராட்டத்தின் போது விமல் வீரவங்ச நிலத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தின் போது அங்கு நின்ற இருவரை பொலிஸார் கைது செய்து, அதில் ஒருவருக்கு விலங்கிட்டு பொலிஸ் ஜீப் வண்டியில் ஏற்றிச் செல்ல முயன்றனர். இதன்போது உடனடியாக தலையிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, கைது செய்யப்பட்டவர்களுடன் தானும் பொலிஸ் ஜீப் வண்டியில் ஏறிக்கொண்டார். விமல் வீரவங்சவின் இந்த அதிரடித் தலையீட்டை அடுத்து, கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸாரால் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.