​”மரண அச்சுறுத்தல் விடுத்து வாக்குமூலம் பெறும் திசைகாட்டி அரசாங்கத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக மக்களின் குரல்” – சாகர காரியவசம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டுக் எதிர் கட்சிகளின் விசேட ஊடக சந்திப்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கலந்துகொண்டு தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

“மோசடியான திசை காட்டி அரசாங்கத்தின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக – மாபெரும் மக்களின் குரல்” எனும் தொனிப்பொருளில் அமைந்த இந்த ஊடக சந்திப்பில், கபில சந்திரசேன என்பவரின் மரணம் தற்கொலையா அல்லது திட்டமிட்ட வகையில் அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டாரா என்ற பாரிய சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கபில சந்திரசேனவிற்குப் பிணை வழங்கப்பட்ட விவகாரத்தில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தலையிட்டு, நீதிமன்றத்தில் வினோதமான கோரிக்கைகளை முன்வைத்ததாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்து முறையான விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டியது சட்டத்தை மதிக்கும் அனைவரினதும் கடமையாகும் என வலியுறுத்தினார்.

மேலும், லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவிற்கு எதிராக கபில சந்திரசேன ஏற்கனவே நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி ஒன்றைச் சமர்ப்பித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய சாகர காரியவசம், ரங்க திசாநாயக்க தன்னை அச்சுறுத்தி முன்னைய ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்களைக் கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தில் சேர்க்க முயன்றதாகக் குற்றம் சாட்டினார்.

இத்தகைய அச்சுறுத்தல்கள் மற்றும் மரண பயத்தை ஏற்படுத்தி வாக்குமூலங்களைப் பெறும் கொடுங்கோல் போக்குகள் தற்போதைய ஆட்சியில் அதிகரித்துள்ளதாக அவர் சாடினார்.
குறிப்பாக, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்டம் பாரபட்சமாக அமுல்படுத்தப்படுவதாகவும், மக்கள் விடுதலை முன்னணியுடன் (JVP) தொடர்புடைய நபர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

நிலக்கரியில் இடம்பெற்ற முறைகேடுகள் அல்லது ஏனைய நிதி மோசடிகள் குறித்துப் புகார்கள் அளிக்கப்பட்டாலும், பொலிஸாரும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் அத்தகைய நபர்கள் விடயத்தில் மௌனம் காப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு சட்டத்தையும் நீதியையும் கேலிக்குள்ளாக்கும் அரசாங்கத்தின் செயல்பாடுகளை முறியடிக்க எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மக்கள் சார்பில் குரல் கொடுக்கும் என அவர் இந்த ஊடக சந்திப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.