நிலச்சரிவு அபாய நிலையை கருத்திற்கொண்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் ரத்தினபுரி, எலபாத, குருவிட்ட, கஹவத்தை மற்றும் நிவிதிகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் முதலாம் கட்ட நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனதீர தெரிவித்துள்ளார்.
மலைப்பாங்கான ஏனைய பகுதிகளிலும் நிலவும் மழைவீழ்ச்சி காரணமாக, ஏற்கனவே மண்சரிவு அறிகுறிகள் தென்பட்ட இடங்கள் மீண்டும் செயற்பாடடையும் (Reactivation) அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, நிலச்சரிவு அபாய அடையாளங்கள் காணப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களும், அத்தகைய இடங்களை கடந்து செல்பவர்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் சாய்வடைதல் போன்ற அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அல்லது நிலச்சரிவு அபாயம் உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சி தொடரும் பட்சத்தில் சரிவான பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றி நடப்பது அவசியமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

