“ரணில் ஜனாதிபதி, நான் பிரதமர் என்று சஜித்தால் ஏன் கூற முடியாது?” – முன்னாள் எம்.பி அஜித் மன்னப்பெரும கேள்வி
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய அரசியல் சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைவது குறித்து நிலவும் விவாதங்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், தான் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவதற்குத் தயார் எனத் தெரிவிக்கும் நிலையில், அதற்கு ஒரே ஒரு எளிய வழிமுறை மட்டுமே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சஜித் பிரேமதாச அவர்கள், “ரணில் ஜனாதிபதியாக இருக்கட்டும், நான் பிரதமராகச் செயல்படுகிறேன்” என்கிற ஒரு தெளிவான அறிவிப்பை வெளியிட்டால், பிரிந்துள்ள இரு தரப்புகளும் மிக எளிதாக ஒன்றிணைந்துவிடும் என்று அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் ரணில் விக்கிரமசிங்க என்பதையும், இன்றும் சஜித் அவரை மரியாதையுடன் ‘சர்’ (Sir) என்றே அழைப்பதையும் அவர் தனது உரையில் நினைவுபடுத்தினார்.
இவ்வாறானதொரு நிலையில், கட்சிகள் ஒன்றிணைவதற்கு நீண்ட பேச்சுவார்த்தைகளோ அல்லது குழுக்களின் பரிந்துரைகளோ தேவையில்லை எனத் தெரிவித்த அவர், சஜித் பிரேமதாசவின் இந்த ஒரு பிரகடனம் ஒட்டுமொத்த அரசியல் பிரிவினையையும் முடிவுக்குக் கொண்டுவரும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

