ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான சிறப்புப் பிரதிநிதி மரியா காஸ்டிலோ மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் (EEAS) இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதி மரியா காஸ்டிலோ பெர்னாண்டஸ், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திரவை இன்று (09) சந்தித்துக் கலந்துரையாடினார்.

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற 04 வது ஐரோப்பிய ஒன்றிய இந்தோ-பசிபிக் அமைச்சரவை மன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகவே இந்தச் சந்திப்பு அமைந்திருந்தது.
இதன்போது, இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம், உலகளாவிய தொடர்புகள், வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆராய்ந்தனர்.

குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதில் UNCLOS உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு, CRIMARIO மற்றும் IORIS போன்ற பிராந்திய செயற்திட்டங்களில் இலங்கையின் ஈடுபாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலகளாவிய இணைப்புகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து கருத்துப் பரிமாறப்பட்டதுடன், மத்திய கிழக்கின் தற்போதைய சூழல் எரிசக்தி, வர்த்தகம், சுற்றுலா மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை எரிசக்தி மற்றும் பல்வேறு இணைப்புத் திட்டங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீடுகளை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது சுட்டிக்காட்டிய விசேட பிரதிநிதி, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் கூட்டாண்மைகளை பல்வகைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதேவேளை, புதிய விதிமுறைகளின் கீழ் இலங்கை மீண்டும் GSP+ வரிச்சலுகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் (PTA) மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தங்களின் தற்போதைய நிலைப்பாட்டை பிரதி அமைச்சர் தெளிவுபடுத்தினார். அத்துடன் சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் அவர் இதன்போது மீள உறுதிப்படுத்தினார்.

மே 09 ஆம் திகதி கொண்டாடப்படும் ஐரோப்பா தினத்தை முன்னிட்டு, விசேட பிரதிநிதிக்கும் அவரது தூதுக்குழுவினருக்கும் பிரதி அமைச்சர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இச்சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மோரேனோ, கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.