ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கலாக அமையக்கூடாது – கூட்டு எதிர்க்கட்சி எச்சரிக்கை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், முன்னாள் அமைச்சர்களான டிலான் பெரேரா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர், அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு சவால் விடுப்பதாகக் குற்றம் சாட்டினர்.
இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மஹரகமவில் ஆற்றிய உரையின் காணொளித் துண்டொன்று காண்பிக்கப்பட்டது.
அதில், மே மாத காலப்பகுதிக்குள் 10 பிரதான ஊழல் வழக்குகள் மற்றும் 5 குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 15 வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும், அதற்கான தீர்ப்புகள் விரைவில் வெளிவரும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்ட பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தீர்ப்புகள் எப்போது வழங்கப்படும் என்பதை ஒரு நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முன்கூட்டியே அறிவிப்பது நீதித்துறையின் கௌரவத்தை பாதிக்கும் செயல் எனத் தெரிவித்தார்.
அரசியல் தேவைகளுக்காக நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதும், தீர்ப்புகள் குறித்து முன்னறிவிப்பு செய்வதும் ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டினார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா, தானும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸும் 1994 ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்றத்தில் இணைந்து பணியாற்றும் நெருங்கிய நண்பர்கள் என்பதை நினைவுகூர்ந்ததுடன், தற்போதைய சூழலில் சட்டத்தின் ஆட்சி என்பது தனிப்பட்ட பழிவாங்கல்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என வலியுறுத்தினார்.
முறையான விசாரணைகளின்றி அரசியல் எதிரிகளை இலக்கு வைப்பதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இறுதியாகக் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
தாம் தனிப்பட்ட ரீதியில் ஊழல் ஒழிப்பு விசாரணைகளை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், அதேவேளை அந்த விசாரணைகள் அரசியல் மேடைகளில் கூறப்படுவது போல பழிவாங்கல் நோக்கம் கொண்டதாகவோ அல்லது நீதித்துறையை வழிநடத்தும் முயற்சியாகவோ இருக்கக்கூடாது எனத் தெரிவித்தார். மொத்தத்தில், அரசாங்கம் சட்டத்தை அதன் போக்கில் விடுவிக்க வேண்டுமே தவிர, அரசியல் லாபங்களுக்காக நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதாகக் காட்டிக்கொள்ளக் கூடாது என இந்த ஊடக சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

