கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் முற்றுகை: இருவர் தப்பியோட்டம்

கந்தளாய் யூசுப் - Sri Lanka - Reporter for MEIVELI

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு அண்மித்த காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கள்ளச்சாராய (வடிசாராயம்) உற்பத்தி நிலையம் ஒன்றை கந்தளாய் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று மாலை (02)முற்றுகையிட்டுள்ளனர்.

கந்தளாய் தலைமையக பொலிஸ் அதிகாரி லக்மல் விஜயவர்த்தன அவர்களின் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கந்தளாய் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று பீப்பாய்களில் இருந்த சுமார் 540,000 மில்லி லீற்றர் கோடா (Godu) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

மேலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, பரவிபாஞ்சான் குளத்தின் நீரில் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 47 மரக் குற்றிகள் மற்றும் மரக்கம்புகளும் கைப்பற்றப்பட்டன.

சம்பவ இடத்தில் இருந்த சந்தேகநபர்கள் பொலிஸாரைக் கண்டதும் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தப்பிச்சென்ற இரு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 5 இலட்சம் ரூபாய் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.