ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் : விசாரணை நடத்த சிஜடி குழு பிரான்ஸ் செல்கிறது
Meiveli Media Team

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிஜடி ஷானி அபேசேகர உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் குழு ஒன்று, பிரான்சுக்குப் பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான, புலனாய்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தக் குழு பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது வெளிநாட்டில் வசித்து வரும், பிள்ளையானின் முன்னாள் பேச்சாளரான அசாத் மௌலானாவிடம் விசாரணை நடத்துவதே அவர்களின் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகக் கருதப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான விரிவான விசாரணையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் மற்றும் வெளிப்படுத்தல்கள் குறித்து, அசாத் மௌலானாவிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலும் வாக்குமூலங்களையும் விளக்கங்களையும் கோரி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

