கந்தளாய் – கண்டி பிரதான வீதியில் கட்டாக்காலி கால்நடைகள் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்குமா பிரதேச சபை?

கந்தளாய் யூசுப் - Sri Lanka - Reporter for MEIVELI

 

கந்தளாய் – கண்டி பிரதான வீதியின் நகரப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகக் காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து கந்தளாய் பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நகரின் பிரதான வீதிகள் மற்றும் கடைத்தெருக்களின் நடுப்பகுதிகளில் மாடுகள் கூட்டமாக நிற்பதும், படுத்து உறங்குவதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இதன் விளைவாக கடும் போக்குவரத்து நெரிசல் உருவாகி, வாகனங்களை இயக்குவதில் ஓட்டுநர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் வீதிகளில் நிற்கும் கால்நடைகள் தெளிவாகக் காணப்படாததால், மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி பயணிகள் விபத்துகளுக்குள்ளாகும் அபாய நிலை அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், நடைபாதைகள் கால்நடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், முதியவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் வீதியின் நடுப்பகுதியில் அபாயகரமான முறையில் நடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது பாதசாரிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், எந்த நேரத்திலும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரதேச சபைக்கு விடுக்கப்படும் கோரிக்கை

தமது கால்நடைகளை வீதிகளில் கட்டுப்பாடின்றி உலாவவிடும் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

“நகரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், போக்குவரத்து இடையூறுகளை நீக்கவும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைச் சீர்செய்யவும் கந்தளாய் பிரதேச சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்தக் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கந்தளாய் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.