இலங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடல்
Meiveli Media Team

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இலங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர்.
இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் தேனா மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் போது இலங்கை அரசாங்கம் எடுத்திருந்த நடவடிக்கைகளுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நன்றி தெரிவித்திருந்தார். இலங்கையில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஐரிஸ் தேனா கப்பல் மீதான தாக்குதலை அமெரிக்காவால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றம் என்று விவரித்து, அமைச்சர் அரக்சி கண்டித்துள்ளார்.
சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் 1949ம் ஆண்டு ஜெனீவா உடன்படிக்கைகளின் கடுமையான மீறலாக அமைந்த இந்தத் தாக்குதலை ஈரான் ஒருபோதும் மறக்காது என்று அவர் மேலும் வலியுறுத்தினார். குற்றவாளிகளைப் பொறுப்பேற்கச் செய்ய, ஈரான் அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிகளையும் பின்பற்றும் என்று அவர் உறுதியளித்தார். பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திஇ ஈரான் மற்றும் இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

