அரசாங்கத்தின் நிலக்கரி மோசடியை மறைக்க நாளொன்றுக்கு 7 இலட்சம் லீட்டர் டீசல் விரயம்: சஞ்சீவ எதிரிமான்ன குற்றச்சாட்டு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி ஊழல் மற்றும் முறையற்ற டெண்டர் நடைமுறைகள் காரணமாக ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறையை ஈடுகட்ட, மிக அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்படும் டீசலில் நாளொன்றுக்கு 7 இலட்சம் லீட்டர் வரை மின் உற்பத்திக்காக வீணடிக்கப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் இன்று (2026.04.22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அண்மையில் ஹொங்காங்கில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டின் போது HSBC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோர்ஜஸ் எல் ஹெடரி, புளூம்பேர்க் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், இலங்கை ஒரு காலகட்டத்தில் ஒரு பீப்பாய் எரிபொருளை 286 டொலர் போன்ற மிக அதிக விலைக்கு கொள்வனவு செய்ய நேரிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் விளக்கமளித்த கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர், ஒரு பீப்பாய் சுத்திகரிக்கப்பட்ட டீசல் 285 முதல் 303 டொலர் வரையிலான விலையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வளவு அதிக விலைக்கு வாங்கப்படும் டீசலையே தற்போதைய அரசாங்கம் தனது நிலக்கரி ஊழலை மறைப்பதற்காகப் பயன்படுத்தி வருவதாக சஞ்சீவ எதிரிமான்ன குற்றம் சாட்டினார்.
அரசாங்கம் முறையற்ற மற்றும் ஊழல் நிறைந்த டெண்டர் நடைமுறைகளைப் பின்பற்றி, பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கு நிலக்கரி விநியோக உரிமையை வழங்கியதன் காரணமாக, நிலக்கரி இறக்குமதி தாமதமானதுடன் கொண்டு வரப்பட்ட நிலக்கரியும் தரம் குறைந்ததாகக் காணப்படுகிறது.
இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரத் தொகுதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கிருந்து முழுமையான மின் உற்பத்தியைப் பெற முடியாமல் போயுள்ளது. தேசிய மின் கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கும் நோக்கில், மாற்றாக டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் இயக்கப்படுவதாகவும், இதற்கு நாளொன்றுக்கு 7 இலட்சம் லீட்டர் டீசல் செலவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய விலைகளின்படி, டீசல் மூலம் ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய சுமார் 150 ரூபாய் செலவாகும் நிலையில், இந்த பாரிய நிதிச் சுமையை அரசாங்கம் பொதுமக்கள் மீதே சுமத்துகிறது.
ஏற்கனவே மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் இத்தகைய நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் ஊழல்கள் காரணமாக எதிர்காலத்தில் மீண்டும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படும் அபாயம் உள்ளதாகவும், இதன் விளைவுகளை மக்கள் இன்னமும் அனுபவித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

