மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான எட்டு வங்கிக் கணக்குகளில் 930 பில்லியன் ரூபாய் பணம்

Meiveli Media Team

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான எட்டு வங்கிக் கணக்குகளில் 930 பில்லியன் ரூபாய் பணம் இருப்பதாகத் தெரிவித்து, சமூக வலைதளங்களில் திட்டமிட்ட முறையில் அவதூறுப் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் முன்னணியினர் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்  முறைப்பாடு ஒன்றை அளித்தனர். தேசிய மக்கள் சக்தியின்  சமூக வலைதளக் கணக்குகளின் ஊடாக இவ்வாறான போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த முறைப்பாட்டை முன்வைப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு உறுப்பினர் பசன் கஸ்தூரி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிந்து எனப்படும் தயாகாந்த பெரேரா மற்றும் கட்சி உறுப்பினர் எம். நிஷாந்த ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தனர். உண்மைக்குப் புறம்பான இவ்வாறான அநாவசியமான பரப்புரைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இதன்போது அவர்கள் வலியுறுத்தினர்.