பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் உள்நாட்டுத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, எதிர்வரும் புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை மிகவும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு இலங்கை நிலையான ஆற்றல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டாரா பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளுக்குப் புதைபடிவ எரிபொருட்களைப் பெறுவதில் பெரும் சவால்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் மின்சாரத்தைச் சேமிக்க பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்த அவர், இந்தப் புத்தாண்டு காலத்திலும் அதே போன்றதொரு பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான பல்வேறு நடைமுறை ஆலோசனைகளை வழங்கிய பேராசிரியர், குறிப்பாக இரவு 6:00 மணி முதல் 10:00 மணி வரையான காலப்பகுதியில் மின்சாரத் தேவை மிக அதிகமாக இருப்பதால், அந்த நேரத்தில் தேவையற்ற மின் பயன்பாட்டைக் குறைப்பது அவசியம் எனச் சுட்டிக்காட்டினார்.
விடுமுறை நாட்களில் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாலும், சூரிய சக்தி மூலம் பகல் வேளையில் அதிக மின்சாரம் கிடைப்பதாலும், சமையல், துணி துவைத்தல் மற்றும் இஸ்திரி செய்தல் போன்ற பணிகளைப் பகல் நேரத்திலேயே முடித்துக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார். மேலும், தொலைக்காட்சி, இணைய ரௌட்டர்கள் மற்றும் ரைஸ் குக்கர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தாத போது அவற்றின் சுவிட்சுகளை அணைத்துவிடுமாறும், குறிப்பாக அலுவலகங்களை மூடிச் செல்லும் போது மின் சாதனங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
புத்தாண்டுக்காகப் புதிய மின் சாதனங்களை வாங்கும் போது, மின் திறன் மிக்க சாதனங்களைத் தேர்ந்தெடுப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். அதிகாரசபையினால் வழங்கப்படும் நட்சத்திரக் குறியீடு (Star Rating) கொண்ட சாதனங்கள், குறிப்பாக நான்கு அல்லது ஐந்து நட்சத்திரங்களைக் கொண்டவை, ஆரம்ப விலையில் சற்று அதிகமாகத் தெரிந்தாலும் நீண்ட கால அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தை பெருமளவு குறைத்து நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும் என பேராசிரியர் பண்டாரா தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

