நவீனமயமாக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் மக்களிடம் கையளிப்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

– பொதுமக்களின் பணத்தில் நவீனமயமாக்கப்பட்ட இந்த முனையத்தை அதே தரத்துடன் பேணுவதற்கு மக்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என நம்புகிறேன்.

விமானப் படையின் அர்ப்பணிப்பினால் எதிர்பார்த்ததை விடவும் மிக விரைவாக நவீனமயமாக்கல் பணிகளை நிறைவு செய்ய முடிந்தது.
— அமைச்சர் பிமல் ரத்நாயக்க

முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், இன்று (08) முற்பகல் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

424 மில்லியன் ரூபாய் செலவில், “கிளீன் ஸ்ரீலங்கா” கருப்பொருளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், இலங்கை விமானப் படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவளப் பங்களிப்புடனும் 24 மணிநேரமும் முன்னெடுக்கப்பட்ட பாரிய நடவடிக்கையின் விளைவாக, இந்தத் திட்டம், திட்டமிட்ட காலத்திற்கு முன்னரே நிறைவு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

தினமும் சுமார் 75,000 பயணிகள் மற்றும் சுமார் 2,000 பஸ்கள் பயன்படுத்தும் வகையில் பல நவீன வசதிகளுடன் இந்த பேருந்து முனையம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இதன் தரைத்தளம் பஸ் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், முதலாவது மாடியில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்காக குளிரூட்டப்பட்ட தங்குமிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது மாடியில் இலங்கை போக்குவரத்துச் சபையின் அலுவலகம் மற்றும் நவீன கேட்போர் கூடம் என்பன அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், முதலாவது மாடியில் விற்பனை நிலையங்கள் மற்றும் நவீன சுகாதார வசதிகளும், இரண்டாவது மாடியில் பாடசாலை மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தங்குமிட வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முழு வளாகமும் CCTV கெமரா கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதோடு, டிஜிட்டல் திரைகள் மற்றும் நவீன தகவல் மையத்தின் ஊடாக பயணிகளுக்குத் தேவையான தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன.

இங்கு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, மில்லியன் மற்றும் பில்லியன் கணக்கில் செலவிடப்படும் பல திட்டங்களுக்கு மத்தியில், புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டத்தைப் போன்று பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டிய வேறு எந்தத் திட்டமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் பணத்தில் நவீனமயமாக்கப்பட்ட இந்த முனையத்தை அதே தரத்துடன் பராமரிப்பதே அடுத்த சவாலாகும் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்காக மக்கள் தமது பொறுப்பை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு வருட காலத்திற்கு இதனைப் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க பாதுகாப்புச் செயலாளர் உடன்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாடு எதிர்நோக்கிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தப் பணியை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு வழங்கிய அர்ப்பணிப்புக்காக இலங்கை விமானப் படைக்கு அமைச்சர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

அதேபோல், இலங்கை போக்குவரத்துச் சபை என்பது அரசியல் அதிகாரத்தினால் பெரும் அழிவுக்குள்ளாக்கப்பட்ட ஒரு நிறுவனம் என்றும், அதனைப் பாதுகாப்பதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நேர்மையான அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, நவீன வசதிகளுடன் மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக மத்திய பேருந்து நிலையத்தின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இது ஒரு அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தபோதிலும், அதிகார பலம் மற்றும் அடாவடித்தனத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட குழுக்களினால் வெவ்வேறு பகுதிகள் பிரித்துக்கொள்ளப்பட்டிருந்ததால் அழிவடைந்து கொண்டிருந்தது. ஆனால், 200 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட புதிய மாற்றத்தின் மூலம் மக்களுக்கு மிகவும் உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் என்பது வெறும் வர்ணம் பூசப்பட்ட மாற்றம் மட்டுமல்ல என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் போது அதற்குத் தேவையான வசதிகளையும் அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், இவ்வாறான கட்டமைப்புக்கள் மற்றும் முறைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் போது மக்களின் சிந்தனைப் போக்கும் மாறும் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, கொழும்பு மேயர் விராய் கெலி பல்தசார், ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் வி.பி. எதிரிசிங்க, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் எம்.ஜி. ஹேமச்சந்திர மற்றும் அரச அதிகாரிகள், கிளீன் ஸ்ரீலங்கா செயலகப் பிரதிநிதிகள், பாதுகாப்புப் பிரிவு பிரதானிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.