எரிபொருள் விலையைக் குறைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச வலியுறுத்தல்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய உலகளாவிய போர்ச்சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், இலங்கையின் எரிபொருள் பாதுகாப்பை (Fuel Security) உறுதிப்படுத்தவும், மக்களுக்குச் சுமையற்ற விலையில் எரிபொருளை வழங்கவும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் வலுச்சக்தி அமைச்சரிடம் இது தொடர்பாகப் பல கேள்விகளை எழுப்பிய அவர், தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஏன் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடினார்.
துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலையில் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் எனத் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், எரிபொருள் மீது விதிக்கப்படும் வரிகள் மற்றும் தற்போதைய விலை சூத்திரம் தொடர்பான விரிவான அறிக்கையைச் சபைக்குச் சமர்ப்பிக்குமாறு கோரினார்.
தற்போதைய எரிபொருள் விலை சூத்திரத்தை ஏற்கப்போவதில்லை என்றும், மக்கள் நலன் சார்ந்த புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்துவோம் என்றும் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அதனைச் செய்யத் தவறியமைக்கான காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்நாட்டிற்கு எரிபொருட்களை இறக்குமதி செய்து, கப்பலிலிருந்து இறக்கும் நிலை வரையிலும், பெட்ரோல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நிலை வரையிலும் ஏற்படும் செலவுகள் குறித்து ஒவ்வொரு எரிபொருள் வாரியாகவும் விளக்கமளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, 2026 ஜனவரி முதல் மார்ச் வரை இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருட்களின் விபரங்கள், அவை எந்தெந்த கப்பல்களில் கொண்டு வரப்பட்டன மற்றும் முதுராஜவல, கொழும்பு சேமிப்பு முனையங்களில் இறக்கப்பட்ட அளவுகள் போன்றவற்றைத் தனித்தனியாகத் தெளிவுபடுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தற்போதைய இயல்திறன் மற்றும் அதன் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்பிய அவர், குறித்த சுத்திகரிப்பு நிலையம் முழு அளவில் இயங்காவிட்டால் அதற்கான பின்னணிக் காரணங்கள் யாவை என்றும் கேள்வி எழுப்பினார். அதேவேளை, ஸ்பெயின், துருக்கி, இந்தியா, மலேசியா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் சர்வதேச விலை மாற்றங்களுக்கு மத்தியிலும் தமது நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருவதைச் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, அரசாங்கத்திடம் உள்ள மேலதிக கையிருப்புப் பணத்தைப் பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தினருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் எரிபொருள் விலை குறைப்பு மூலம் உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் தனது உரையில் மேலும் வலியுறுத்தினார்.

